மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சென்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக 26, அதிமுக 4, அமுமுக 2, சுயேச்சை 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நகர்மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா, புதன்கிழமை மன்னார்குடி நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான கே.சென்னுகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி, கூட்ட அரங்கில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதலில் திமுக உறுப்பினர்களும், பின்னர், அமமுக உறுப்பினர்களும், இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் கூட்ட அரங்கிற்கு வந்து தங்களது வார்டுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். வார்டு எண் வரிசைப்படி பதவியேற்புக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர். முதலில்...
