அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு: சேதம், காணாமல் போன பொருட்களை மதிப்பிடும் பணி தொடக்கம்
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக தலைமைஅலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது. அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையில் கடந்த 11-ம்தேதி சென்னை வானகரத்தில் அதிமுக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரச்சார வாகனத்தில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு திடீரென வந்தார். அப்போது அங்கிருந்த பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பல்வேறு அறைகளை சேதப்படுத்தி, ஆவணங்கள் மற்றும் விலைமதிப்புள்ள ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்கள்...
