தமிழகம்

சிவகாசி அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுகாதார வளாகம் கட்ட வேண்டும்… தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை

268views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், எரிச்சநத்தம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 குழந்தைகள் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சுகாதார வளாகம் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. சேதமடைந்து கிடக்கும் சுகாதார வளாகத்தைத் தான் குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு இல்லாததால் அதிக துர்நாற்றத்துடன் இருக்கும் சுகாதார வளாகத்திற்கு செல்வதால், குழந்தைகளுக்கு நோய்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
மேலும் பள்ளியின் பின் பகுதியில் எரிச்சநத்தம் கண்மாயிலிருந்து, மற்ற கண்மாய்க்கு செல்லும் நீர்ப்போக்கு கால்வாய் உள்ளது. அந்தப்பகுதியில் முட்செடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் தங்குமிடமாக உள்ளது. நீர்ப்போக்கு பாதை தூர்ந்து போய் இருப்பதால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் பண்ணையாக மாறியுள்ளது. பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக பள்ளியில் புதிய சுகாதார வளாகம் கட்ட வேண்டும். பள்ளியின் பின்புறம் உள்ள நீர்ப்போக்கு பாதையை சீரமைக்க வேண்டும் என்று, பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் சிவகாசி தாலுகா அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!