இந்தியா

5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி உத்தரவு!

46views

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.பஞ்சாப்பை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது.

ஆனால்,காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை தழுவியது.இதன்காரணமாக,கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிர்வாக ரீதியிலான உட்கட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

காங்கிரஸின் இந்த கூட்டம் சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் கட்சிக்காக பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் நாங்கள் அனைவரும் அதை நிராகரித்தோம். என தெரிவித்தார்.

கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்தப்படும் வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், ஏப்ரல் மாதத்தில் சிந்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கு முன் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில்,5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யுமாறு அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,உத்தரபிரதேசத்தில் அஜய் குமார் லல்லு,பஞ்சாபில் நவ்ஜோத் சிங் சித்து, உத்தரகண்டில் கணேஷ் கோடியல், கோவாவில் கிரீஷ் சோடன்கர் மற்றும் மணிப்பூரில் நமீரக்பம் லோகேன் சிங் ஆகியோரை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை ஏற்று உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!