இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

122views
தலையாட்டித்தான் வரவேற்கின்றன
ஒவ்வொரு இலைகளும்
உன்னை காணாத நாள்
இலையுதிர் காலம்
கருப்பு குழல்அருவியின்
சீரான பரவலில்
உற்சாக மடைந்தது
மாமரக்குருவி
வனமெங்கும் கூவல்
தாவர பாஷையும்
பறவையின் ஓசையும்
எங்கு படித்தாய்..
பூக்களையும் சினுங்கவைக்கும்
புன்முறுவல் காண
ஓடிவரும் தட்டானிடம்
பறக்கும் உல்லாசம்
கண்மூடி நிற்கும் போதெல்லாம்
ஞானநிலை
கண்திறந்து பார்த்தால்
மோனநிலை..
காற்றுக்கும் பூவுக்கும்
காதல் மூட்டுகிறாய்
காலத்தை வெல்லும்
ஜாலத்தை பார்வையில்
தீட்டுகிறாய்..
ரிமை மீட்பு போரின்
உச்சகட்டத்தில்
தவித்துக் கொண்டிருக்கிறேன்
நிரம்பி வழியும் பிரியங்களைத்
தளும்பாமல்
தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்
அடிக்கடி இரு ஆயுதங்களை
கூறுதீட்டி கொண்டிருப்பது
யுத்தத்தின் ஆயத்தம்
காய்த்த மரத்தில் தானே
கல்லடி இங்கே
காய்த்த மரமே
காதலடி
இமை மூடிய புதையல்
திருடியது எதையோ
ஆனால் தடயங்கள்
இதயத்தில்..
எத்தனை மெனக்கெட்டு
என்ன பயன்
அத்தனையும் தாண்டி
நிகழ்ந்தே விடுகிறது
பேரிடரும் நிவாரணமும்….
வெட்கத்தை நீராக்கி
உன்னில் மிதந்து செல்லும்
யாவும் தேன் மழை
உன்னைக்காணும் தவத்தின்
பித்தேறிய நாளில்
ஒத்திசைவான தூறல்
ஞானநிலை
நினைந்து நினைந்து
நனைந்து நனைந்து
உருகியோடும்
திரவத்திற்கு உன் பெயர்
உன்னோடு உரையாடல்
நிகழ்த்தவே பூமி வந்த
பூ மழையின்
சத்தமெல்லாம் சங்கீதம்
நீ கைகளை நீட்டி
அரவணைக்கவே
ஆகாயம் தாண்டியது
ஆலி ‍
அதிசிய மலரின்
ஈர யாத்திரை
வானம் உற்று நோக்கும்
வான வேடிக்கை
உன்னில் கலந்து
உயிர் பிழைத்தது
விண்ணின் துளி…

ல்லாப் பூவிலும்
உன் சாயல்
நினைவுகளை வாசமாக்கினேன்
தொலை தூரத்து
பறவையின்
பாடல் ஏதோ செய்கிறது
நிற்காமல் ஓடும்
அருவியிலிருந்து
உன் பெயர்
உருண்டு ஓடியது
ஒரு தியானம்
ஒரு ஞானம்
ஒரு வானம்
ஒரு மோனம்
ஒரு கானம்
எல்லாமும் எப்படி
சுடர் விழியில் சாத்தியமாக்கும்
கும்மிருட்டு சூழ்
நிலவுலகில்
புதிய வெளிச்சம்
உனதன்பு
உன் கருவிழி
அகல்விளக்கு ஏற்றும்
மோட்ஷ தீபம்
தீட்சண்யம் தரும்
பார்வையில்
அண்டம் முழுவதும்
அருள் வெள்ளம்
யாழ் ராகவன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!