தமிழகம்

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற பெண்கள். தள்ளுமுள்ளு பரபரப்பு. பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதி

100views
மதுரை மாநகர் பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் உள்ள திடல் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 75 ஆயிரம் பெண்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு புறங்களிலும் கரும்பு கட்டுகள் வாழை, இளநீர் கொத்துகளை வைத்து முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதனை விழாவிற்கு வந்த பெண்கள் எடுத்துச்சென்று விடக்கூடாது என்பதற்காக 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கரும்பு கட்டுகளுக்கு காவலாக நின்று கொண்டிருந்தனர்.
இதனையடுத்து விழா மேடைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த உடனயே கூட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர் அப்போது கரும்புகளை எடுக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் நிகழ்ச்சி முடியும் வரை கரும்புக்கட்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர்.
விழாவின் நிறைவாக தேசிய கீதம் பாடல் பாடிக்கொண்டிருந்த போது நேராக நின்று கொண்டிருந்த பெண்கள் தேசிய கீதம் முடிந்த அடுத்த நொடியிலே போர் தொடுப்பது போல கூட்டம் கூட்டமாக குவிந்து கரும்புகளை கட்டு கட்டாக எடுத்துச் சென்றனர்
முதியவர்கள் இளம்பெண்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்தவரை கட்டு கட்டாக கரும்புகளையும் இளநீர் வாழை போன்றவற்றையும் எடுத்துச் சென்றனர்.
இரண்டு கை போதாது, மதுர காரனுக்கு கையே கத்தி என்ற வசனங்களை பேசிக்கொண்டே பெண்களும் இளைஞர்களும் கரும்புகளையும் வாழை தார்களையும் எடுத்துச் சென்றனர்
சிலர் கரும்புகளை வெட்டி எடுப்பதற்காக வீட்டில் இருந்து அரிவாள் கத்தி உள்ளிட்டவைகளை எடுத்து வந்து கரும்புகளை கட்டி எடுத்து சென்றனர்.
காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் கூட உதயநிதி ஸ்டாலின் வெளியே புறப்படுவதற்கு முன்பாகவே கரும்பு கட்டுகளை பெண்கள் எடுக்க தொடங்கியதால் அந்தப் பகுதி முழுவதும் களேபரம் போல காட்சி அளித்தது அப்போது அந்த வழியாக சென்ற உதயநிதி ஸ்டாலின் ஏளனமாக பெண்கள் அடித்துக் கொள்வதை பார்த்து சிரித்தபடி சென்றார்.
இதனை செல்போனில் வீடியோ எடுத்த போது சில பெண்கள் வெட்கப்பட்டு தங்களது முகத்தை மறைத்துக் கொண்டனர் சிலர் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என போஸ் கொடுத்தபடி கரும்பு கட்டுகளை அள்ளிச் சென்றனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் சிலர் செல்போனில் படம் எடுங்க படம் எடுங்க என பெண்களை வெட்கப்படும் வைக்கும் வகையில் அவர்களே செல்போன்களில் படங்களை எடுத்தனர்.

அரசு நலத்திட்ட உதவிகள் என பெண்களை காலை 12 மணிக்கு அழைத்து வந்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்ததோடு கரும்புகளை எடுத்துச் செல்லும் பொழுது ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற நிகழ்ச்சிகளில் கரும்புகளை எடுப்பதற்காக பெண்கள் ஒரே நேரத்தில் குவிந்த போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!