தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் “தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

33views
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, 53301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
நமது நகரங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முன்னணியாக தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்கள் பல சமூகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட போதிலும் தூய்மைப் பணியாளர்கள் நமது சுகாதார உள்கட்டமைப்பை பராமரிக்க தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பொழுது சில நேரங்களில் எதிர்பாராத ஆபத்தை எதிர் கொள்கிறார்கள். எனவே, தூய்மைப் பணியாளர்களின் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வினை மேம்படுத்தும் பொருட்டு 2022-23 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில் “நகரம் தூய்மையாக இருப்பதற்கு நாள்தோறும் அயராது உழைத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது இவ்வரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இவர்களின் வாழ்வினை மேப்படுத்தவும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும். அவர்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து பயன்பெறச் செய்யவும் அவர்களின் குழந்தைகள் முறையான கல்வி பெறுவதை உறுதி செய்யவும்இ இயந்திரமயமாக்கப்படும் தூய்மைப்பணியில் அவர்களுக்கு தேவையான திறன் பயிற்சினை வழங்கி அவர்களை அப்பணியில் ஈடுபடுத்தவும் விருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மாற்றுத்தொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் , தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து இத்திட்டத்திற்கான இலட்சினை வெளியிட்டார். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்கான தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட மொபைல் செயலியையும் முதலமைச்சர், வெளியிட்டார்.  தொடர்ந்து, முதலமைச்சர், ஐந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை,  கால் உறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி  தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களை பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் என, மொத்தம் 53301 பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள் நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக,  சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6 திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்புர உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை, முதலமைச்சர் , முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பின்னர், படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப் படவுள்ளது இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள் அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம்இ காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இனணப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .என். நேரு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,
வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பூமிநாதன், கோ.தளபதி, ஆ. தமிழரசி, மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி பொன்வசந்த் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர், துணை மேயர் டி. நாகராஜன் பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அகமதாபாத் நகர்ப்புற மேலாண்மை மையத்தின் இயக்குநர் மன்விதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!