107views
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான’ காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுக்க முயலும் திமுக அரசின் திரைமறைவுச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது.
காவிரிப்படுகை மாவட்டங்களை முற்றுமுழுதாகப் பாலைவனமாக்கி, விவசாயிகளை வேளாண்மையை விட்டே அகற்றும் நோக்கத்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் அனுமதியளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட மீத்தேன் எரிகாற்று எடுக்கும் கொடுந்திட்டம், ஐயா நம்மாழ்வார் உள்ளிட்ட பெருமக்களின் தொடர்ப்போராட்டத்தால் கைவிடப்பட்டது. பின்னர் அதே திட்டம் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் முந்தைய அதிமுக அரசால் செயல்படுத்த முனைந்தபோது விவசாயிகள் விழிப்படைந்து வீரியமான போராட்டங்களை முன்னெடுத்ததால் மீண்டும் கைவிடப்பட்டது.
மேலும், நாம் தமிழர் கட்சி மற்றும் விவசாயச் சங்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகவும், வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்றும் கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்களைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. இதனால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிகாற்று உள்ளிட்ட நாசகார திட்டங்களால் பாதிக்கப்படவிருந்த இலட்சக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பேரழிவிலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.