ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: ரயில் தண்டவாளம் சேதம்
ஜார்க்கண்டில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பில், ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள கிரிதி மாவட்டத்தில் சிச்சாக்கி – சவுதரிபந்த் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில்,நேற்று நள்ளிரவு நக்சலைட்டுகள் சிலர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.இதில் தண்டவாளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகள், தண்டவாளத்தை ஆய்வு செய்து, அதை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக நேற்று ஹவுரா – டில்லி இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன; ஹஜாரிபாக் மாவட்டத்தில் இரண்டு மொபைல் போன் கோபுரங்களும் தகர்க்கப்பட்டன. இது நக்சல்களின் நாச வேலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து உள்ள போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.