தமிழகம்

இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. 4 நாட்களுக்கு மழை தொடரும் என முன்னறிவிப்பு !!

42views

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.30) முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (அக்.1) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல், நாளை மறுநாள் (சனிக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!