கவிதை

வழிப் போக்கன்..!!

245views
யார் வீட்டுத் தலைமகனோ.??
இல்லை இளையவனோ..??
செல்லும் வழி தோறும்
சில நேரம்
அவன் முன்னே
பல நேரம்
அவன் பின்னே…
பார்வையில் எந்த சலனமில்லை
அவன் மனமோ
வெள்ளைப்பலகை.!!
இருபத்திரண்டு வயது குழந்தை
யாருக்கும்
எந்த இடறுமில்லை
சங்கிலிகள் அவனை
பிணைக்கவில்லை.!!
மனதில் எந்த
கள்ளமுமில்லை
அவன் கண்களில் ஒரு ஒளியின் தொல்லை..,!!
இளைய பட்டாளங்கள்..,
இணைய உலகில் ஏதோ, தேடிய போது..
உற்சாகமாய் சாலை ஓரம் துள்ளும் மானாய் அவன்..,!!
வாட்ஸ் அப்பில் விரல் நனைக்கும் போது
நட்சத்திரங்களோடு
பேசும் அரிஸ்டாட்டிலாய் அவன்..,!!
காலை போய் மாலை
வீடு திரும்பும் காளை அவன்..,!!
எங்கே பயணம்..
எங்கே முடிவு.,?
இலக்கில்லாத பறவை அவன்.!!
நமக்கு அவன் ஒரு
வழிப்போக்கன்..,!!
யாருடைய இதயத்திலிருந்தோ
கசியும் ரத்தத்துக்கு
சொந்தக்காரன்..,!!
இறைவன் வரைந்த கோலமிது
புள்ளியில் தொடங்கி
புதிராய் முடியுது.,!!
சில, நேரங்களில் கிறுக்கல்கள் கூட
ஓவியமாகுது நம்மைப்
படைத்தவன்
மனது வைத்தால்..,!!
  • உமா நாராயண் (குமரி உத்ரா)
    கன்னியாகுமரி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!