சினிமா

முடிவுக்கு வந்த 18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை – தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து அறிவிப்பு

46views

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்(Dhanush). இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து ட்வீட் செய்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ’18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்திருக்கிறார்.

இதே குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், ‘கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

தனுஷ் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானவர். இவர் 22 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து கரம் கரம்பிடித்தார். தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினி(aishwarya rajinikanth) திருமணம் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடிக்கு, யாத்ரா – லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தனுஷ் பல உயரங்களை தொட்டார். கோலிவுட்டின் கவனிக்கத்தக்க ஜோடிகளில், தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடியும் ஒன்று. ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனுஷின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இருவரும் விவாகரத்து அறிவித்திருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!