ஒமைக்ரான் கொரோனா பரவிய நாடுகள் எண்ணிக்கை 50-ஐ தாண்டியது.. WHO அதிர்ச்சி தகவல்
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமைக்ரான் பரவல் நிலைகள் குறித்து அவ்வபோது தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், இதுவரை 57 நாடுகளில் ஒமைக்ரான் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒமைக்ரான் பரவல் தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை குறித்து அறிய கூடுதல் காலமாகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகவேகமாக பரவும் என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒமைக்ரான் வகை கொரோனா பெரியளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.