உக்ரேனில் ரஷ்ய உத்தி தோல்வி; லிவிவ் நகரில் மாஸ்கோ தாக்குதல் தீவிரம்
உக்ரேனில் ரஷ்யா தொடுத்து இருக்கும் போர் உத்தி தோல்வி கண்டுவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பதவியில் நீடிக்க இயலாது என்றும் அமெரிக்க அதிபர் போலந்தில் தெரிவித்தார். முன்னதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ரஷ்ய அதிபரை ‘கசாப்புக்கடைக்காரர்’ என்று வர்ணித்தார். ஆனால் உடனடியாக இதை ரஷ்யா மறுத்து கண்டித்தது.
தங்கள் அதிபர் யார் என்பதை முடிவு செய்வது ரஷ்யர்களைப் பொறுத்தது என்றும் மாஸ்கோ தெரிவித்தது.
இவ்வேளையில், உக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் மாஸ்கோ பல நகர்களிலும் தொடர்ந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரேனின் மேற்கு லிவிவ் நகரில் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து துல்லியமாகப் பாயும் குருஸ் ஏவுகணைகளை ரஷ்யா பாய்ச்சியதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
லிவிவ் நகருக்கு அருகே உக்ரேனிய படைகள் பயன்படுத்திய எரிபொருள் கிடங்கு ஒன்றையும் ராணுவ ஆயுதங்களைச் சரிசெய்யும் ஆலை ஒன்றின் மீதும் குருஸ் ஏவுகணையை பாய்ச்சி அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்தது.
உக்ரேன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா எடுத்து இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அந்த நாட்டின் மீது ரஷ்ய ஆயுதப் படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக ரஷ்யா கூறியது.
லிவிவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை காட்டும் காணொளிகளையும் ரஷ்ய அமைச்சு வெளியிட்டது.
இதனிடையே, லிவிவ் நகர் தாக்குதலில் மக்கள் காயமடைந்துவிட்டதாக அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர். லிவிவ் நகரம் போலந்து உக்ரேன் எல்லையில் 60 கி.மீ. தொலைவில் உக்ரேனில் இருக்கிறது.
ரஷ்யா மாறி மாறி உக்ரேனின் எல்லையில் படைகளைக் குவிக்கிறது என்று டினேசென்கோ என்ற அதிகாரி கூறினார். உக்ரேனில் முன்னேற ரஷ்யா புதிய முயற்சிகளை முடுக்கிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பல ஆளில்லா வானூர்திகளை ரஷ்ய படைகள் அழித்துவிட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.