இலங்கைக்குப் புதிதாகக் கடன் உதவி செய்யும் திட்டம் இல்லை என்று உலக வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடக்கும் இலங்கை, நிதி உதவிக்காக உலக வங்கியிடம் கை ஏந்தியுள்ளது. இந்நிலையில், முறையான, போதுமான பேரியல் பொருளியல் கட்டமைப்பை இலங்கை உருவாக்கும் வரை அதற்கு கடன் கொடுக்கப் போவதில்லை என்று உலக வங்கி தெரிவித்தது.
பொருளியல் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தும் சீர்திருத்தங்களை இலங்கை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் தற்போது நிலவும் பொருளியல் நெருக்கடிக்கான முக்கிய காரணத்தை அது கண்டறிய வேண்டும் என்றும் அது கூறியது. மிக மோசமான பொருளியல் நெருக்கடியால் உணவு, எரி பொருள், மருந்து பற்றாக்குறையால் இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
“இலங்கையின் அவலநிலை, பொருளியல் நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொண்ணாத் துயர் ஆகியவை குறித்து உலக வங்கிக் குழுமம் அக்கறை கொள்கிறது,” என்று உலக வங்கி நேற்று அறிக்கை வெளியிட்டது. இலங்கைக்கு முன்பு வழங்கப்பட்ட கடன்திட்டங்களின் வாயிலாக எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்கள் எதிர்கொள்ளும் மருந்து, சமையல் எரிவாயு, உரம், சிறுவர்களுக்கான உணவு, ரொக்கப் பற்றாக்குறையைக் குறைக்க உலக வங்கி உதவி வருகிறது. நிதியுதவி நியாயமான வகையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக அது கூறியது.
ஏற்கெனவே நடப்பில் உள்ள 17 திட்டங்களை உலக வங்கி மறுசீரமைக்கும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே கடந்த மாதம் தெரிவித்திருந்தார். கூடுதல் கடன் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் இலங்கைக்குக் கூடுதல் உதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் உலக வங்கி தற்போது எடுத்துள்ள இந்த முடிவால் இலங்கைக்குப் பேரிடி விழுந்துள்ளது. விரைவில் கடன் கிடைத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்த இலங்கை ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களுக்காக இலங்கை மக்கள் கால் கடுக்க நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கின்றனர்.
விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்று ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாத சங்கட நிலைக்கு இலங்கை அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருள் இல்லாததாலும் இருப்பதை மிச்சப்படுத்தும் நோக்கிலும் தலைநகர் கொழும்பில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை பெட்ரோல் நிலையத்துக்குத் தள்ளிக்கொண்டே செல்கின்றனர்.