தமிழகம்

சிவகாசி தாலுகா அலுவலகத்தில், மின்தடை காரணமாக பணிகள் பாதிப்பு – ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த, பொதுமக்கள் கோரிக்கை

56views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் மின்தடை காரணமாக, தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தாலுகா அலுவலகத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் சிவகாசி தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றியுள்ள வருவாய் கிராமங்களை உள்ளடக்கி தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள், பல்வேறு மனுக்கள், ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், புதிய ரேசன் கார்டு பெறுதல், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் என பல்வேறு கோரிக்கைகளுடன் தினசரி குறைந்தது 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர். மேலும் ஆதார் சேவை மையம், இ – சேவை மையமும் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் செயல்படுவதால், தாலுகா அலுவலகம் காலை முதல், மாலை வரை என எப்போதும் பொதுமக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக செயல்பட்டு வரும். சாட்சியாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படுத்தும் நாட்களில், தாலுகா அலுவலகத்திலும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் தாலுகா அலுவலகப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
பல்வேறு பணிகளுக்காக தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உடனடியாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!