தமிழகம்

சிவகாசி பகுதிகளில், இன்று அதிகாலை பலத்த மழை

117views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக முற்றிலும் மழை இல்லாத நிலையில், கோடை காலத்தைப் போல வெயில் கடுமையாக இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக மேகமூட்டமாக இருந்தாலும் மழை பெய்யவில்லை.
இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. திடீர் மழை காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் வாறுகால்கள் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. சிவகாசி புறநகர் பகுதிகள், நாரணாபுரம் சாலை, ஓம் சேர்மா நகர், அம்மன் நகர், செல்லையநாயக்கன்பட்டி, மீனம்பட்டி, பாறைப்பட்டி, பேராபட்டி, அனுப்பங்குளம், மேட்டமலை, சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, உப்புபட்டி, மாரனேரி, கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, அம்மாபட்டி, மம்சாபுரம், திருத்தங்கல், வெள்ளையாபுரம், கங்காகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு பின்பு மழை பெய்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!