தமிழகம்

சதுரகிரிமலையில், பக்தர்கள் கூட்டம் குவிந்தது

41views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். தை மாத அமாவாசை பூஜைகளுக்காக இன்று முதல், வரும் 22ம் தேதி (ஞாயிறு கிழமை) வரை, 4 நாட்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இன்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரிமலையில் குவிந்தனர். காலை 7 மணியிலிருந்து, மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.
பிரதோஷ நாளை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளை, பக்தர்கள் மனமுருக வணங்கி வருகின்றனர். வரும் 21ம் தேதி (சனி கிழமை)யன்று, மிகவும் புண்ணிய மிக்க நாளாக கருதப்படும், தை அமாவாசை நாளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரிமலைக்கு வருவார்கள். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!