தமிழகம்

சிவகாசி அருகே, வீட்டிற்குள் புகுந்து 60 பவுன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

41views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஒரே நாளில், அடுத்தடுத்து இருந்த 4 வீடுகளுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம், தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (67). இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததையறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகைள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் இதே பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (62) என்பவரது வீட்டில் இரண்டரை கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 800 ரூபாய் பணமும் திருட்டு போனது.
இதே போல சிவசிதம்பரம் (29) என்பவரது வீட்டிலிருந்து 2 கிராம் தங்க நகை திருடு போனது. மேலும் இதே பகுதியில் உள்ள,  விருதுநகர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் மேலாளராக பணிபுரியும் சிவக்குமார் (40) என்பவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. நல் வாய்ப்பாக இங்கு பணம், நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. தொடர் கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் சுற்றித் திரிந்ததாக அந்தப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  தொடர் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிவகாசி அருகே, ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!