தமிழகம்

ராஜபாளையத்தில், குடி போதையில் கிணற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழப்பு

106views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்,  அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (30). இவர், ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். கூலி வேலை பார்த்து வந்த பாண்டித்துரை மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவரது மனைவி இவருடன் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பாண்டித்துரை வழக்கம் போல மது பாட்டில் வாங்கிக் கொண்டு, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கிணற்றில் அமர்ந்து மது குடித்துள்ளார். போதை அதிகமான நிலையில் பாண்டித்துரை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் பாண்டித்துரை கிணற்றுக்குள் மூழ்கினார். இது குறித்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி, கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பாண்டித்துரை உடலை மீட்டனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : சு.வடிவேலன் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!