தமிழகம்

சிவகாசியில் செய்தியாளரை தாக்கிய, மாநகராட்சி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

203views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊடக செய்தியாளர் வைத்தியலிங்கம் (48), மாநகராட்சி ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். காயமடைந்த வைத்தியலிங்கம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாமன்ற கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் இந்திராதேவி, தனது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சப் பணத்தை எந்த அதிகாரியிடம் கொடுக்க வேண்டும் என்று, கையில் பணத்தை கட்டாக எடுத்து காண்பித்து கேட்டார். இந்த சம்பவத்தை செய்தியாக்கியதற்காக, நிருபர் வைத்தியலிங்கத்தை, திருத்தங்கல் பகுதி வருவாய் ஆய்வாளர் (பொ) கருப்பசாமி பாண்டியன், உமர்அப்துல்லா மற்றும் சிலர் சேர்ந்து கடுமையாக தாக்கி, அவரது லேப்டாப் மற்றும் கேமிரா உள்ளிட்டவைகளை அவரிடமிருந்து பறித்து வீசி சேதப்படுத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை செய்தியாக்கியதற்காக அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். செய்தியாளரை தாக்கிய மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் கைது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டு, செய்தியாளரை தாக்கிய மாநகராட்சி ஊழியர்களை கண்டித்து பேசினார். ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று பேசிய அவர், செய்தியாளர் வைத்தியலிங்கத்தை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருத்தங்கல் பகுதி பொதுமக்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் சிவகாசி பகுதி செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!