தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

41views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (40). இவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை, செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு ராக்கெட், புஸ்வானம் மற்றும் பூச்சட்டி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பூச்சட்டி ரக பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக இருந்ததால் விபத்து நடந்த அறையில் இருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர். சரியான நேரத்தில் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீ மற்ற அறைகளுக்கு பரவாமல் தடுத்தனர். நல் வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!