தமிழகம்

மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு

118views
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களை வழங்கி உதவுமாறு தலைமையாசிரியர் ஷேக் நபி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு வுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் 23 புத்தகங்களை,  அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு அனுப்பினார்.  இதில் அவர் எழுதிய 10 நூல்களின் முன்பக்கத்தில் உன்னால் முடியும், உழைப்பு உயர்வு தரும், உலகத்தை அறிய முயலுங்கள், உடனே செய், நீங்கள் சிறந்தவர், நடவடிக்கை எடு, நீங்கள் சிறப்பு மிக்கவர்.. போர் வீரனாக இருங்கள். போன்ற விழிப்புணர்வு வாசகங்கள், அவரது கையொப்பத்துடன் அனுப்பியிருந்தார்.  அந்நூல்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஆகிய மார்ச் 1 -ந் தேதி பெறப்பட்டது பள்ளிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாக புத்தகத்தை பெற்ற தலைமையாசிரியர் ஷேக் நபி கூறினார். இந் நூல்கள் மாணவர்களின் பார்வைக்கென பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டன .

புத்தகம் பற்றிய விளக்கங்களை அந்தந்த வகுப்பாசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். கடிதம் எழுதிய உடன் 23 புத்தகங்களை கொடையுள்ளத்தோடு வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை தாங்கினார். மதுரை ரயில்வே காவல்நிலைய தலைமைக் காவலர் சுரேஷ் குமார் முன்னிலை பொறுப்பேற்று மாணவர்களுக்கு நூல்களை வழங்கினார். உதவித்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!