தமிழகம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 537 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த காவல் துறையினர் குட்கா கடத்தி வந்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

170views
ராஜபாளையம் அருகே சேத்தூரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சேத்தூர் மாலையம்மன் கோயில் தெரு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் அடங்கிய இரண்டு மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுனர் எக்கலாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணிடம் விசாரணை செய்தபோது, ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் கிடங்கில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் மொத்தமாக தேக்கி வைக்கப்பட்டு விருதுநகர் மற்றும் அருகே உள்ள தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளுக்கு சில்லறை விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.
அருணை கைது செய்த காவல்துறையினர் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 537 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் மற்றும் குட்காவை கடத்தி வந்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ₹. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் குட்கா பதிக்கவைக்கப்பட்டிருந்த கிடங்கு உரிமையாளர் பாலமுருகன் மற்றும் குட்கா வியாபாரி தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!