”தமிழக விவசாயிகளை காக்கவே, தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அவரது சிலைக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்காக பாடுபட்ட எந்த தலைவரின் வரலாறும், தமிழக பாடத் திட்டத்தில் இல்லை. தமிழக வரலாற்றில் தீரன் சின்னமலை, அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற குணாளன் நாடார், பொல்லான் என பல நுாறு பேர் இல்லை. இதுபோன்றவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்.வரும் 5ம் தேதி நான் தஞ்சையில் உண்ணாவிரதம் இருப்பது கர்நாடக அரசு, கர்நாடக முதல்வரை எதிர்த்து அல்ல.அங்குள்ள காங்., தலைவர் சித்தராமையா, சிவகுமார் போன்றோரும், ‘மேகதாது அணை கட்டுவதை தமிழகத்துக்கு ஏன் கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும்’ என கேட்பதை எதிர்த்து தான் போராட உள்ளேன்.அம்மாநிலத்தில் விவசாயிகளை காக்க, அங்குள்ள பா.ஜ., முயல்கிறது. தமிழக விவசாயிகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.காவிரி ஆணையம் அனுமதி பெறாமல், அணையை கட்ட முடியாது என்பதை உணர வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.