தமிழகம்

சிவகாசியில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற காய்கறி வியாபாரி… போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கிழே விழுந்து காயம்

95views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கரத்தினம் (43). இவர் சிவகாசி பகுதியில் தலைச்சுமையாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  வழக்கம் போல சிவகாசி, பழனியாண்டவர்புரம் காலனி பகுதியில் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த அவர், அந்தப்பகுதியைச் சேர்ந்த வசந்தாதேவி (73) என்ற மூதாட்டிக்கு காய்கறிகள் விற்பனை செய்தார். வாங்கிய காய்கறிகளுக்கு பணம் கொடுப்பதற்காக, வசந்தாதேவி பணத்தை எடுத்து வருவதற்காக வீட்டிற்குள் சென்றார். அவர் தனியாக இருப்பதை அறிந்த தங்கரத்தினம், குபீரென்று வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றார்.
இதனால் பயந்துபோன வசந்தாதேவி பயங்கரமாக கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட தங்கரத்தினத்தை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற தங்கரத்தினத்தை விசாரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அப்போது போலீசாரின் இருசக்கர வாகனத்தில் ஏறிய தங்கரத்தினம், திடீரென்று வண்டியிலிருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்தார். காயமடைந்த அவரை போலீசார் மீட்டு கைது செய்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
காய்கறி வியாபாரம் செய்ய வந்த நபர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி, நகையை பறிக்க முயன்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!