மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டும் முயற்சியை தடுப்போம் என தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக அதன் 2022-2023 பட்ஜெட்டில் ரூ 1000 கோடி நிகி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.
மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இந்த மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது.
இந்த அறிவிப்பு வரும் கர்நாடக அரசின் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படியிருப்பினும் தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடகா அரசின் மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.