வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், 2ம் தேதி டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
வரும், 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலுார், அரியலுார், திருச்சி, கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வரும், 4ம் தேதி கன மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளுக்கு, மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.