தமிழகம்

தனுஷ்கோடியில் நவீன கலங்கரை விளக்கப் பணிகள் தீவிரம்: இலங்கையின் தலைமன்னார் வரை ஒளி தெரியும்

36views

 

ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் மூலம் புதிய கலங்கரை விளக்கம் நவீன ரேடார் கருவி வசதியுடன் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் பழவேற்காடு தொடங்கி, சென்னை மெரினா, மாமல்லபுரம், பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கள்ளிமேடு, கோடியக்கரை, அம்மாபட்டினம், பாசிப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், கீழக்கரை, பாண்டியன் தீவு (தூத்துக்குடி மாவட்டம்), மணப்பாடு, கன்னியா குமரி, முட்டம் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன.

புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், இந்திய எல்லைப் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்கரைப் பகுதிகளை கண்காணிப்பதற்காகவும் தனுஷ் கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கடந்த கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது.

இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரூ.7 கோடி மதிப்பில் 50 மீட்டர் உயரத்தில் மின்தூக்கி வசதிகளுடன் கூடிய கலங்கரை விளக்கமாக இது அமைய உள்ளது. இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடியின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்வை யிடுவதற்கு வசதி செய்யப்படும். கலங்கரை விளக்கத்துடன் குழந்தைகளுக்கான பூங்காவும் அமைக்கப்படுகிறது.

இன்னும் மூன்று மாதத்தில் கலங்கரை விளக்கப் பணிகள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். நவீன ரேடார் கருவியும் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். மேலும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்க உள்ள இந்த கலங்கரை விளக்கத்தில் கடல் காற்றால் கலங்கரை விளக்கம் பாதிப்பு அடையாமல் இருக்க அதிக உறுதித்தன்மை கொண்ட கம்பிகளும், ரசாயனக் கலவைகளும் பயன்படுத்தப்படு கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில் அமைக்கப்படும் மின்விளக்கானது, 30 கி.மீ தூரம் வரையிலும், அதாவது தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் வரை தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!