தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

72views
வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக, உருவாகியுள்ள வளி மண்டல் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக திருக்குவளை பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. கீழச் செருவை, கோவில்பட்டி 110 மிமீ, அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு 90மிமீ, பெலாந்துறை, சொலையாறு 80மிமீ, தேவக்கோட்டை, ஏற்காடு 70மிமீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் 30 மிமீ, ஊத்துக்கோட்டை, பூண்டி,கேளம்பாக்கம் 20மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு பிறகு மிதமான மழை மாலை வரை பெய்தது. அதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். இதே நிலை 4ம் தேதி வரை நீடிக்கும்.
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா,  தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60கிமீ வேகத்திலும் 4ம் தேதி  வரை வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!