விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் – முதல் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம்

111views

செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் ஓபன் பிரிவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் திடீரென விலகி உள்ளது. இதனால், செஸ் ஒலிம்பியாட் தொடரில் 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீரர்கள் பங்கேற்கின்றனர்.

செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, சீனா இம்முறை பங்கேற்கவில்லை. அதேவேளையில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் என மொத்தம் 6 அணிகளில் 30 பேர் பங்கேற்கின்றனர். ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளை கொண்ட சுவிஸ் லீக் வடிவத்தில் நடத்தப்படுகிறது. அதில், முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. பொதுபிரிவினருக்கான முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதேபோன்று பெண்களுக்கான முதல் போட்டியில் அமெரிக்கா விளையாட உள்ளது. போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சதுரங்க போட்டி நடைபெறும் இடத்தை சுற்றி பூஞ்சேரி, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு குறித்து காஞ்சி சரக டி.ஐ.ஜி சத்தியபிரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , “ 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து போலீஸார் பாதுகாப்பு பணிக்கு வருகை தந்துள்ளனர்.

44வது சர்வ தேச சதுரங்க போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதால் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சதுரங்க போட்டியில் பங்கேற்க வருகை தரும் நபர்கள் யாராக இருந்தாலும் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!