உலகம்உலகம்

சிங்கப்பூர் மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை – வரலாறு என்ன?

61views
மலேசியாவில் இருந்து தண்ணீர் பெறுகிறது சிங்கப்பூர். தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீரை மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து சிங்கப்பூர் பெற்றுக்கொள்கிறது.
இந்த தண்ணீர் பகிர்வுக்காக மலேசியா, சிங்கப்பூர் இடையே 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், புதிய ஒப்பந்தங்களாக மாறின.
எனினும் நாள்களின் போக்கில் சில பிரச்னைகள் தலைதூக்கின. தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா சில கோரிக்கைகளை முன்வைக்க, சிங்கப்பூர் அவற்றை ஏற்க மறுக்க, இரு நாடுகளும் இப்போது அனைத்துலக நடுவர் மன்றத்தை அணுகும் அளவுக்குப் பிரச்னை முற்றியுள்ளது.
இந்தப் பிரச்னையின் ஆணிவேர் என்ன என்பதை சுருக்கமாக சில வரிகளில் இவ்வாறு குறிப்பிடலாம்.
“இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, தினமும் மலேசியாவிடம் இருந்து 250 மில்லியன் கேலன் தண்ணீர் பெறும் சிங்கப்பூர் அரசு, அதிலிருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 2061 காலாவதியாகும்,” என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2%க்கு அதிகமாகவும் சிங்கப்பூரில் இருந்து தண்ணீர் வாங்குகிறது ஜோகூர் மாநிலம். எனினும் இவ்வாறு பகிரப்படும் நீருக்கான விலை என்ன என்பதில்தான் சிக்கல். குறைவான விலைக்கு தண்ணீரைப் பெறும் சிங்கப்பூர், அதை சுத்திகரித்த பின்னர் விற்கும்போது அதிக தொகையைப் பெறுகிறது என்றும் இதை ஏற்க இயலாது என்றும் மலேசியா சுட்டிக்காட்டுகிறது.
மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் என்ற தனி நாடு 1965ஆம் ஆண்டு உதயமானது. எனினும் அதற்கும் முன்னதாகவே தண்ணீர் பகிர்வு தொடர்பாக 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்றளவும் நீடிக்கிறது. இதில் துணை ஒப்பந்தம் ஒன்று 1990ல் கையெழுத்தானது. இவ்விரு ஒப்பந்தங்களின்படி மலேசிய எல்லையில் உள்ள ஜோகூர் நதிநீரை சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூரின் அன்றாட தண்ணீர் தேவை என்பது 430 மில்லியன் கேலன்கள். இதில் சுமார் சரிபாதி அளவு மலேசியாவிடம் இருந்து கிடைக்கிறது.
“1965ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றபோது, இவ்விரு ஒப்பந்தங்களும், சிங்கப்பூர் சுதந்திர ஒப்பந்தத்தில் ‘பரஸ்பர அரசு உத்தரவாதங்களாக’ குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சுதந்திர ஒப்பந்தம் மலேசியா, சிங்கப்பூர் அரசாங்களுக்கு இடையே கையெழுத்தாகின. எந்தவொரு தரப்பும் ஒப்பந்தத்தில் உள்ளவற்றை தன்னிச்சையாக மாற்ற இயலாது,” என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின்படி, நீர் பிடிப்புப் பகுதிகளாக பயன்படுத்தப்படும் மலேசிய நிலப்பகுதிக்கு சிங்கப்பூர் வாடகை செலுத்த வேண்டும் என்று முடிவானது. ஜோகூர் மாநிலத்தில் கட்டடத் தொகுப்புகளுக்கு என்ன வாடகை கிடைக்குமோ, அதை செலுத்த ஒப்புக்கொண்டது சிங்கப்பூர்.
சிங்கப்பூரை அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு?
மேலும், ஒப்பந்தப்படி மலேசியாவில் இருந்து பெறும் ஒவ்வொரு ஆயிரம் கேலன் நீருக்கும் சிங்கப்பூர் 3 காசுகள் தர வேண்டுமென விலை நிர்ணயிக்கப்பட்டது. அதேவேளையில், கொள்முதல் செய்த தண்ணீரில் இருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்கும் சிங்கப்பூர், அதற்காக ஆயிரம் கேலன் நீருக்கு 50 காசுகள் பெறுகிறது.
1973ஆம் ஆண்டு வரை இரு நாடுகளும் ஒரே கரன்சியை பயன்படுத்தி வந்தன. அது முடிவுக்கு வந்ததும் தண்ணீர் பகிர்வுக்கான விலை மலேசிய ரிங்கிட்டில் நிர்ணயிக்கப்பட்டது.
அதாவது ஒவ்வொரு ஆயிரம் கேலன் தண்ணீருக்கும் தலா 3 காசுகள் (ஒரு காசு என்பது ஒரு சென் (sen) விலை நிர்ணயிக்கப்பட்டது. (நூறு சென்கள் ஒரு ரிங்கிட் ஆகும்.)
1962 ஒப்பந்தப்படி, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விலை குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
1990ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) மற்றும் ஜோகூர் மாநில அரசு இடையே நவம்பர் 24, 1990 அன்று நீர்ப்பகிர்வு தொடர்பாக துணை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அதன்படி பண்டார் தெங்காரா என்ற சிற்றூரில் லிங்யூ (Linggiu) ஆற்றின் குறுக்கே அணை கட்ட சிங்கப்பூருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜோகூர் நதியில் இருந்து தண்ணீர் எடுப்பற்கு வசதியாக இந்த ஏற்பாடு அமைந்தது.
அதேவேளையில், அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலப்பகுதி, அங்கு கிடைத்திருக்கக்கூடிய இதர வருமானங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது. மேலும், ஒரு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் மலேசிய ரிங்கிட் பிரீமியமாக வழங்கப்பட்டதுடன், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் சதுர அடி நிலத்துக்கும் ஆண்டு வாடகையாக முப்பது ரிங்கிட் அளிக்கவும் சிங்கப்பூர் முன்வந்தது.
லிங்யூ அணையின் கட்டுமான, பராமரிப்புச் செலவுகளையும் அத்தீவு நாடு ஏற்றுக்கொண்டது. இன்று சிங்கப்பூரின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த அணை.
லிங்யூ அணை ஜோகூர் அரசாங்கத்துக்கு சொந்தமாக உள்ளது என்றாலும் அதன் கட்டுமானத்துக்கும் நடைமுறை செயல்பாட்டுச் செலவுகளுக்காகவும் சிங்கப்பூர் சுமார் 300 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவிட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!