தமிழகம்

அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு: சேதம், காணாமல் போன பொருட்களை மதிப்பிடும் பணி தொடக்கம்

97views

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக தலைமைஅலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது.

அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையில் கடந்த 11-ம்தேதி சென்னை வானகரத்தில் அதிமுக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரச்சார வாகனத்தில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு திடீரென வந்தார். அப்போது அங்கிருந்த பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பல்வேறு அறைகளை சேதப்படுத்தி, ஆவணங்கள் மற்றும் விலைமதிப்புள்ள ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் தூக்கிச் சென்றதாக பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் விரட்டி அடித்தனர். தொடர்ந்து வந்த வருவாய்த் துறையினர் கட்சி தலைமை அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, கட்சி தலைமை அலுவலகத்தை ஒப்படைக்கக் கோரி, பன்னீர்செல்லம், பழனிசாமி தரப்பினர் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில், கட்சி அலுவலக சாவியைபழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர்.

பிறகு கடந்த 11-ம் தேதி வைக்கப்பட்ட சீலை அகற்றி எழுத்துப்பூர்வமாக அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் அலுவலக சாவியை ஒப்படைத்தனர். அப்போது அதிமுகமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடனிருந்தார்.

அலுவலகத்தின் தரை தளத்தில் இருக்கும் தலைவர்களின் அறைகள் உடைக்கப்பட்டு, அவற்றிலிருந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. முதல் தளத்தில்இருக்கும் கட்சி அலுவலக அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கணினிகளின் நினைவகங்கள் சிலவும் காணவில்லை என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2-ம் தளத்தில் கணக்காளர் அறையில், ஜெயலலிதா கடந்த 1984-ம் ஆண்டு முதல் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போது, தொண்டர்கள் சார்பில் வழங்கப்படும் செங்கோல், போர் வாள், வெள்ளி சிலைகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறையையும் பன்னீர்செல்வம் தரப்பினர் சேதப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

3-ம் தளத்தில் உள்ள அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு, ஆவணங்கள் சிதறிக் கிடந்தன.மேலும் பீரோக்கள், நாற்காலிகள், மேஜைகள் என பல்வேறு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணிகளை அலுவலக பணியாளர்கள் தொடங்கினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘இங்கு பல அறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில அறைகளில் விலைமதிப்புள்ள பொருட்கள், ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. அதுதொடர்பாக மதிப்பிடும் பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். ஒரு மாதத்துக்கு தொண்டர்கள் யாரும் அலுவலகத்துக்கு வரக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே சேதம் மற்றும் காணாமல் போன பொருட்கள் தொடர்பாக மதிப்பீடு செய்து, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் அளிக்க இருக்கிறோம். அதன் பிறகு புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன” என்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!