தமிழகம்

அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்..?: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

57views

கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை.

வழக்கு நிலுவையில் இருந்தாலும் சீல் வைக்க முடியாது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது என்றும், சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சி அலுவலகம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்துச் செல்ல வேண்டும்..?.

சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், கட்சியில் தனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது.

பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது என வாதிட்டார்.

பொதுக்குழு நடக்கும் போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர் என்பதால், கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை.

அதன்படி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே நுழைவதை தடுத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பு வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!