உலகம்

பாவேந்தர் பாரதிதாசன் விழா : பட்டர்வொர்த் செபராங் ஜெயாவில் திரண்ட தமிழ் நெஞ்சங்கள்!

20views
​”கொலைவாலினை எடடா மிகக் கொடியோர் செயலறவே!” என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வீர வரிகளை மையக்கருத்தாகக் கொண்டு, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் விழா வரலாற்றின் பக்கங்களில் முத்திரைப் பதித்துள்ளது.
​கடந்த 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழா, காண்போர் வியக்கும் வண்ணம் மிக பிரமாண்டமாக அரங்கேறியது. பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் செ.குணாளன் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய இவ்விழா பாரதிதாசனின் பார்வையில் என்னும் பொதுத்தலைப்பை மையமாகக் கொண்டு வண்ணக்கவிஞர் கரு.திருவரசு அவர்களின் மைந்தனும் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவருமான கவிஞர்.திருமாமணி அவர்களின் தலைமையில் பாவலர் கவிக்கோ கோவதன் பாரதிதாசன் பார்வையில் தமிழ்மொழி எனும் தலைப்பிலும் . செந்துறைக்கவிஞர் சோலைமுருகன் பாரதிதாசன் பார்வையில் பெண்ணின் பெருமை எனும் தலைப்பிலும் பாவலர் பாப்பொழில் விண்ணமுதன் பாரதிதாசன் பார்வையில் சமத்துவம் எனும் தலைப்பிலும் பாவலர் பாத்தென்றல் கோ.மகேந்திரன் பாரதிதாசன் பார்வையில் இளைஞர் கடமை எனும் தலைப்பிலும் கவியரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
​இவ்விழாவின் முத்தாய்ப்பாக, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரின் வருகையும், மேடையில் அவர் ஆற்றிய எழுச்சிமிகு உரையும் ஒட்டுமொத்த விழாவையும் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று, நிகழ்ச்சியைக் களைகட்ட வைத்தது.

​”தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!” என்ற பாவேந்தரின் வரிகளுக்கு இலக்கணமாக, மலேசிய மண்ணில் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் காக்க வேண்டியதன் அவசியத்தை டத்தோஸ்ரீ மு.சரவணன் தனது உரையில் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.   பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளிப்பும் தமிழ் இலக்கிய சேவைக்கான இலக்கியச் செம்மல் எனும் விருதை திருமதி ஜெயா சந்திரமோகன் அவர்கள் பெற்றார்.
​பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இவ்விழா, பினாங்கு மாநிலமே உற்று நோக்கும் ஒரு பிரமாண்ட தமிழ் விழாவாக மாறி இருந்தது . ​மண்டபம் நிறைந்த திரளான பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!