தமிழகம்

சிவகாசியில் பணியிலிருந்த பெண் காவலரை தாக்கிய, வழக்கறிஞர் கைது

143views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜம்மாள். இவர் நேற்று இரவு சிவகாசி முருகன் கோவில் பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவகாசி – திருத்தங்கல் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் தகராறு செய்து கொண்டிருப்பதாக காவலர் ராஜம்மாளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்திற்கு ராஜம்மாள் விரைந்து சென்றார். அங்கு சாலையில் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விலக்க முயன்றார். அப்போது தகராறில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர், பெண் காவலர் ராஜம்மாளை பலமாக தாக்கினார். இது குறித்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலர் ராஜம்மாளை தாக்கிய வாலிபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், பெண் காவலரை தாக்கிய வாலிபர் பெயர் முத்துமணிகண்டன் என்றும், அவர் வழக்கறிஞர் தொழில் செய்து வருவதும் தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே அடிதடி வழக்குகள், கொலை மிரட்டல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பெண் காவலரை தாக்கிய வழக்கறிஞர் முத்துமணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  தகராறை விலக்கச் சென்ற பெண் காவலர் ஒருவரை, வழக்கறிஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!