தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தை வைரத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு – குன்றத்து முருகனுக்கு நாளை தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

70views
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகை முன்னிட்டு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழாவும் ஒன்று. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் சேஷ வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகை முன்னிட்டு தெப்ப முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் உள்ள சிறிய வைர தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா நாளை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் அருள்பாளிப்பார்கள். இதே நிகழ்ச்சி இரவில் மின்னொளியிலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!