தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட 160 நபர்கள் மீட்பு; தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வலர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாராட்டு

85views
தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் மனநலம் பாதிக்கப்பட்ட 160 பேர்களை மீட்டெடுத்து அவர்களின் சொந்த ஊரான ராஜஸ்தான் அழைத்து சென்று அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பசியில்லா தமிழகம் மற்றும் அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகிகளுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தென்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு மற்றும் அன்பு ஜோதி ஆசிரமம் மூலம் தமிழகம் முழுவதும் சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்து அவர்களது இல்லம் கண்டுபிடித்து ஒப்படைக்கும் பணியை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சாலையோரம் சுற்றித் திரியும் வட மாநில நபர்களை மீட்டெடுத்து அவர்களை அவர்களது இல்லத்துடன் கொண்டு சேர்க்க தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானிற்கு ஜனவரி 09-ல் கருணை பயணத்தை மேற்கொண்டுள்ளது.
மீட்கப்பட்ட நபர்கள் உரிய அரசு அனுமதி பெற்று, காவல்துறை ஒத்துழைப்புடன் தன்னார்வலர்களை அழைத்து பாதுகாப்புடன் இரண்டு நாள் கருணை பயணத்தை துவங்கி உள்ளது. இந்தியா முழுவதும் சுற்றித் திரியும் தமிழர்களை மீட்டெடுத்து தமிழகம் கொண்டு வந்து, அவர்களது குடும்பம் கண்டுபிடித்து குடும்பத்துடன் சேர்க்கும் பணியையும் மேற்கொண்டுள்ளது. இந்த கருணை பயணம் நோக்கம் குறித்தும், தமிழக அரசு இதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா நேரில் சந்தித்து எடுத்துரைத்தார். தமிழர் நலனை காப்பதில் நமது தமிழ்நாடு அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது என்றும், இந்தியா முழுவதும் ஆதரவின்றி இருக்கும் தமிழர்களை மீட்டெடுத்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் இந்த கருணை பயணத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாகவும் எனது சார்பாகவும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். மேலும் ஆதரவற்ற மக்களுக்காக தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கும் பசியில்லா தமிழகம் குழுவினருக்கும், அன்பு ஜோதி ஆசிரமம் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!