dav
தமிழகம்

திருவாடானை அருகே தொகுப்பு வீடுகள் நரிக்குறவரின மக்கள் கோரிக்கை

33views
திருவாடானை அருகே வீடுகள் கட்டித்தரக்கோரி தமிழக முதல்வரிடம் முறையிட போவதாக நரிக்குறவர் இன மக்கள் மக்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரம் அருகே நரிக்குறவர் குடியிருப்பு கடந்த 1988 ல் உருவானது. இங்கு 188 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 1999-2000 நிதி ஆண்டில் 36 வீடுகள் அரசு சார்பில் கட்டிகொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து எஞ்சியுள்ளோருக்கும் தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 24 ஆண்டுகளாக இக்கோரிக்கை கிடப்பில் உள்ளது. இந்நிலையில், 36 வீடுகளின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து வலுவிழந்துள்ளது. இது குறித்து நரிக்குறவர் இன மக்கள் கூட்டமைப்பு மாவட்ட துணை செயலாளர் செல்வம் கூறுகையில், எங்கள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும், பழுதடைந்துள்ள 36 வீடுகளை புதுப்பித்து தர வேண்டும். வீடுகள் இல்லாததால் சாலை ஓரம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கிறோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவாடானை வந்த கலெக்டரிடம் இது தொடர்பாக முறையிட்டோம். மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக மனு அளித்துள்ளோம். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு கட்டி தரப்படும் என அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் முறையிட முடிவு செய்துள்ளோம் என்றார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!