தமிழகம்

சிவகங்கை அருகே அலுவலக கட்டிடப் பணிக்கு பூமி பூஜை

36views
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , ரூ.395.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடத்திற்கும் மற்றும் ரூ555.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மானாமதுரை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடத்திற்குமான பூமி பூஜையினை, துவக்கி வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், துவக்கி வைத்து தெரிவிக்கையில் : தமிழ்நாடு முதலமைச்சர், அரசின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்து, அனைத்துத் துறைகளின் சார்பில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது மட்டுமன்றி, அனைத்துத் துறைகளின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள். எனது அரசு என்று கூறாமல், நமது அரசு என்று தமிழ்நாடு முதலமைச்சர், எடுத்துரைத்து, தனது அயராது உழைப்பின் மூலம் தமிழகத்தை முன்னோடி மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்திய திருநாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் , கிராமப்புற மேம்பாட்டிற்கு தனித்துவமளித்து அதற்கான அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராமப்புற பகுதியில் சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கெனவும், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நவீன வசதிகளுடன் உள்ளாட்சி அமைப்புக்கள் சார்ந்த கட்டிடங்களை சீரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, பெருநகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களின் வளர்ச்சியை மேம்படுத்திடும் பொருட்டு, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சிறப்பானப் பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் என்னை நியமித்தார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையின் மேம்பாட்டிற்கென, சிறப்பான பணியினை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்நாடு முதலமைச்சர், தற்போது, அமைச்சரவையில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்தி, கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பணிகள் மேற்கொள்வதற்கென என்னை நியமித்துள்ளார்கள். கூட்டுறவுத்துறையில் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதற்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையில் என்னை அமைச்சராக நியமித்த தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான பணிகள் துவங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், புதிய அலுவலகக் கட்டிடங்கள் அமைப்பதற்கென அரசின் கவனத்திற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், நவீன வசதிகளுடன் கூடிய ரூ.395.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடத்திற்கும் மற்றும் ரூ555.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மானாமதுரை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடத்திற்கும், கட்டுமானப் பணிகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
இதுபோன்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அதில் தனிகவனம் செலுத்தி, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் பொதுமக்களை பயன்பெறச் செய்தும், கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்கு அடித்தளமாகவும், பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள், தரமான முறையில் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் ப.சின்னைய்யா (திருப்புவனம்), லதா அண்ணாத்துரை (மானாமதுரை), ஆவின் பால்வளத் தலைவர் சேங்கைமாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள் அ.மூர்த்தி, அ.முத்துச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன், மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன் மற்றும் அங்கையற்கண்ணி, மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கரபரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!