ராமநாதபுரம் அருகே வங்கி வாடிக்கையாளர் விழிப்புணர்வு கூட்டம்
61
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி காரிக்கூட்டம் கிராமத்தில் இன்று நடந்தது.வங்கி வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கையேடுகளை பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
தனிநபரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கிகளின் சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சமீப காலமாக வாடிக்கையாளர்களை வங்கியாளர்கள் போல் சில சமூக விரோதிகள் ஏமாற்றி வாடிக்கையாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் அதை தடுக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி மூலம் நவம்பர் மாதம் முழுவதும் நாடு தழுவிய வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் செல்போனிற்கு தங்கள் வங்கி கணக்கு குறித்து யாரென்றும் அறியாத நபர் விவரங்கள் கேட்டால் தெரிவிக்க கூடாது. உடனடியாக தங்கள் கணக்குள்ள வங்கிகளை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
கோரிக்கைகள் மற்றும் குறைகள் நிறைவேறாத பட்சத்தில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்தால் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கப்பெறும். எனவே இன்றைய காலகட்டத்தில் வங்கிகளின் சேவைகள் பொதுமக்களுக்கு சிறப்பாக பங்காற்றி வருகின்றன. செல்போன் மூலம் பணம் பரிவர்த்தனை தொழில்நுட்பங்களை கையாண்டு வங்கிகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜே.கே. பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் யாழினி புஷ்பவள்ளி, முன்னோடி வங்கி கண்காணிப்பு அலுவலர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்