5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசம் – மா.சுப்ரமணியன் அறிவிப்பு
தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்துவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனால் 12 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி பலியாகின்றனர். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதற்கான தடுப்பூசியாக நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தடுப்பூசிகள் போடும் பணியினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தோம். தினந்தோறும் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை மூன்று தவணைகளாக போடப்படும்.
தடுப்பூசி செலுத்துவதற்கு 12 ஆயிரம் வரை செலவாகும். அரசின் சார்பில் தடுப்பூசிகள் இலவசமாக போடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். எல்லா மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக கூறினார்.
5 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு போட்டிருக்க வேண்டும் ஆனால் என்ன காரணத்தினால் எடப்பாடி அரசு செய்யவில்லை என்பது தெரியவில்லை என்று கூறினார்.
தமிழகத்தில் தற்போது 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. முதல் தவணை உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.