தமிழகம்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தெரு நாய்களை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்; சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

206views
மதுரையில் கடந்த 3 ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தெரு நாய்கள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாவட்ட அளவில் தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது.  குறிப்பாக தெரு நாய்கள் முதியோர்- சிறுமிகள் உள்பட பலரையும் கடித்து வருகிறது.
மதுரை மாநகராட்சி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பெரும்பாலும் வெறி நாய் கடி தடுப்பூசி மருந்துகள் உள்ளன. எனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அலைந்து திரிய வேண்டி உள்ளது.
இந்த நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தைக்கால் தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், இரண்டு சிறுமிகளை கடித்து குதறி விட்டன. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர், இது தொடர்பாக மதுரை மாநகராட்சி வாட்ஸ்ஆப் புகார் எண்ணுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இதன் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் வேணுடன் தைக்கால் தெருவுக்கு வந்தனர்.
அப்போது இதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர், 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து இருந்ததாக தெரிகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் 2 நாய்களுக்கு மட்டும் உரிமம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
எனவே மாநகராட்சி ஊழியர்கள் மீதமுள்ள நாய்களை ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டனர். இதற்கு மறுத்த அந்த வாலிபர், மாநகராட்சி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் வசைபாடியும், அடிக்க பாய்ந்ததாக தெரிகிறது. மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவில் நாய் பிடிக்க வந்த மாநகராட்சி ஊழியர்களை, வாலிபர் ஒருவர் தாக்க முயலும் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!