எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.
அத்துடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வரும் இலங்கை கடற்படை , அவற்றை திருப்பி அளிக்காமல் நாட்டுடைமையாக்கி கொள்கிறது. அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில் ,சில மாத கால இடைவெளிக்கு பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர். இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரமும், உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அத்துடன் அவர்களின் 2 படகுகளையும் சிறை பிடித்து சென்றனர்.
இதனிடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான நாகை , காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 22 பேரையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது. நெடுந்தீவு பகுதியில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.