எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் .
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர் . நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை , வழிமறித்த இலங்கை கடற்படையினர் , எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 43 மீனவர்களுடன் , 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர் .
அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் . அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.
கைதுக்கு மீனவ சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து 12 மீனவர்களை கைது செய்தனர்.
அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்து இழுத்துச்சென்றனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 55 மீனவர்கள், 8 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இதனையடுத்து மீனவர்களின் கைதுக்கு மீனவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் மீனவர்களை விடுவிக்கக்கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.