தமிழகம்

சசிகலா வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்: எடப்பாடி அதிர்ச்சி !

144views

சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிறிது காலத்துக்கு பிறகு அரசியலில் இறங்கியுள்ளார் சசிகலா. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார்.

தொண்டர்களின் ஆதரவு தனக்கு தான் இருப்பதாக கூறிவரும் சசிகலா தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அடுத்தடுத்த தேர்தல் தோல்வி, முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் என அதிமுக அல்லோகலப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று ஓபிஎஸ் பேசியது இதன் பின்னணி தான் எனவும் கூறப்படுகிறது. செல்லூர் ராஜு, ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா உள்ளிட்டோர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். சசிகலாவுக்கு ஆதரவாக கீழ் மட்ட நிர்வாகிகள் செயல்பட்டால் கட்சியைவிட்டு நீக்கும் அதிமுக தலைமை மேல் மட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற பேச்சு கட்சிக்குள்ளேயே இருக்கிறது. இதில் முரண் என்னவென்றால் ஓபிஎஸ்ஸே நிர்வாகிகளை நீக்கிய உத்தரவில் கையெழுத்திடுவார்.

தேவர் குருபூஜையை முன்னிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இந்த முறை பசும்பொன் செல்லமுடியாத நிலையில் சசிகலா சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. சசிகலா கட்சியை கைப்பற்றும் நேரம் நெருங்கிவிட்டதாகவே பலரும் கருத்து தெரிவித்தனர்.

தென் மண்டலத்தில் சசிகலா தான் சார்ந்த சமூக தலைவரின் குரு பூஜையில் கலந்து கொண்டதால்தான் வரவேற்பு பலமாக இருந்தது. தமிழகத்தின் பிற இடங்களில் அவருக்கு வரவேற்பு இருக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களுக்கு சமாதானம் கூறிக்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அதிமுக வடமாவட்ட நிர்வாகிகளை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியுள்ளார் சசிகலா. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., கைத்தறி பிரிவு தலைவர் பாலன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி பூபாலன். மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பொன்னுசாமி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்தனர். அந்த புகைப்படத்தை சசிகலா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் வட மாவட்டத்திலும் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதை சசிகலா காட்டி வருகிறார் என்கிறார்கள்.

ஓரிருவர் என்றால் கட்சியைவிட்டு நீக்கலாம், சசிகலாவை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அத்தனை பேரையும் எடப்பாடி தரப்பு நீக்க முடியாது. கண்டிப்பாக இறங்கி வந்துதான் ஆகவேண்டும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!