முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்குக்கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை தரப்பில், ‘ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறாததால், மருத்துவ ரீதியிலான விவரங்களை எப்படி தெரிவிக்க முடியும்.
அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைபட்சமானது. எங்கள் நற்பெயர் சார்ந்த விஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமையுண்டு. எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறுகிறோம்.
ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அங்கு ஆஜராக மாட்டோம். மேலும், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனியுரிமைக்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்கக் கோரியதால்தான் நாங்கள் கேமராக்களை அகற்றினோம்’ என தெரிவிக்கப்பட்டது.