தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 39 ஒன்றியங்களில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

61views

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பரிசீலனையின்போது 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 25-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 24,416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடக்கும் பகுதிகளில் கடந்த 26-ம் தேதி முதல் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி,கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி,வாலாஜா, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 39 ஒன்றியங்களில் 6-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

அதன்பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வெளியேறாதவர்கள் மீது தேர்தல் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்கள், அதைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுவரை உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாளை (5-ம் தேதி) காலை 11 மணி முதல் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், கை மை, அரக்கு உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

6-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் 17,130 போலீஸார், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!