தமிழகம்

தீவிரமாகும் ‘ஷாகீன்’ புயல்: தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் அக்.4 வரை கனமழை

50views

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘ஷாகீன்’ புயல் இன்று (அக்.2) தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் அக். 4 வரை கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘குலாப் புயல்’, கடந்தஞாயிற்றுக்கிழமை ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோரமாவட்டங்களில் கரையைக் கடந்தது. பிறகு வலுவிழந்த இந்த புயல், தெலங்கானா, மகாராஷ்டிரா வழியாக நகர்ந்து, குஜராத் கடற்பகுதியில் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புதிய புயலாக உருவெடுத்தது. கத்தார் அளித்த பரிந்துரையின்படி இந்த புயலுக்கு ‘ஷாகீன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரபிக் கடலில் உருவான ‘ஷாகீன்’ புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, குஜராத்தின் தேவபூமி துவாரகாவில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 400 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து தெற்கு, தென்மேற்கே 260 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சபகார் துறைமுகத்தில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இதனால், மீனவர்கள் அக்டோபர் 4 வரை வட அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லக் கூடாது.

புயல் காரணமாக பிஹார், மேற்கு வங்கம், சிக்கிம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் அக். 2 முதல் 4-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகன மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ பயுலால் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வானிலை மைய அதிகாரி சுனிதா தேவி கூறும்போது, ”குலாப் புயலில் எஞ்சியவைதான் தற்போது ‘ஷாகீன்’ புயலாக உருவெடுத்துள்ளது. ஒரு புயலின் எச்சங்கள் புதிய புயலாக உருவெடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்றாலும் இதற்கான வாய்பை மறுக்க முடியாது” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!