தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே நாளில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டுதடுப்பூசிகள் போடப்படுகின்றன. கரோனா3-வது அலை எச்சரிக்கை இருப்பதாலும்,கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது.
கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் நடந்த முதல் சிறப்பு முகாமில் 28. 91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக கடந்த 19-ம் தேதி 20 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 16.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், முக்கிய இடங்கள் என23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 1,600 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
சில இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டங்களில் நடந்தமுகாம்களை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிறப்பு முகாம் மூலம் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில்24 லட்சத்து 85,814 பேருக்கு தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. இதில், முதல் தவணையாக 14 லட்சத்து 90,814 பேரும், இரண்டாவது தவணையாக 9 லட்சத்து 95,000 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் மட்டும் 2 லட்சத்து 13,763 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் பணியாற்றிய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இன்றுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தன. சிறப்பு முகாம்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். சென்ட்ரல் ரயில் நிலையம், பட்டாளம் தட்சிணாமூர்த்தி திருமண மண்டபம், ஸ்ட்ராஹன்ஸ் ரோடு சென்னை உயர்நிலைப் பள்ளி, அயனாவரம் நேரு திருமண மண்டபம், அயனாவரம் சாலை பெத்தேல் பள்ளி ஆகிய 5 இடங்களில் நடந்தசிறப்பு முகாம்களில் ஆய்வு செய்த முதல்வர், அங்கு வந்த மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்துகேட்டறிந்தார். அமைச்சர் சேகர்பாபு,சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.